Wednesday, January 17, 2007

கேள்வி

நெடுஞ்சாலைப் பயணம் நெடிதாய் அமையவே
இயற்கையன்னையின்  தரிசனத்துக்காக‌
இமைகள் மூட மறுத்தேன்!
வியக்க வைக்கும் காட்சிக்கு மத்தியில் - என்னை
திகைக்க வைத்தது அந்த ஒரு கணக் காட்சி..
தெரு ஓர குப்பைத் தொட்டியில் விழுந்த எச்சிலை எச்சில் படுத்தும் ஆசையில்
தளிர் இலை துழாவிய  தளிர் கரங்களுக்கு
வெளிர் முகம் காட்டி வறுமையின் சிரிப்பு!
ஏமாற்றம் காணும் தளிர்முகம் காண நினைக்கையில்
எனை  ஏமாற்றம் காணச் செய்து விட்டாள்
வறுமைக்கும் உறவுப் புன்னகை காட்டி
அடுத்த இலையை எதிர் நோக்கி
ஆவலுடன் காத்திருக்கும்  விநோதத்தால்!
காட்சி மறைந்தது கேள்விகள் பிறந்தது..
பிறப்பு  கொடுத்த உறவை இறப்பு முத்தமிட்டதால்
வறுமை உறவானதோ? - இல்லை
திசை மாறிய உறவுகள் பிறப்பளித்ததால்
வறுமை உறவானதோ? - இல்லை
பெண்முகம் கண்டு பொன்முகம் காணா உறவுகள் கைவிட்டதால்
வறுமை உறவுக்கை நீட்டியதோ?
பதில் தேடி எனகுள் ஒரு தேடல்.
உயிரும் மெய்யும் கலந்து
உயிர் மெய் படைப்பவள்
அ + ம் = மா

உறவுகள்

எட்ட எட்ட விலகிச் செல்லும்
தொடுவானம்..

Tuesday, January 16, 2007

க‌ண்ணீர் பூக்கள்..

தாய்மையின் கதகதப்பில் துயில வேண்டியவர்கள்
உந்தன் தகதக ஜூவாலையில்!
பொட்டு வைத்து மை தீட்டி அழகு பார்த்த முகங்களை
உந்தன் பொறாமைத் தீயால் க‌ருக்கி விட்டாயே!

பெயரிலேயே பூ வைத்துக் கொண்டு
மொட்டுக்களைப் பொசுக்கி விட்டாயே!
தளிர் கரங்களால் கண்களில் ஒற்றி
தீபாராதனை புரிந்தவர்களை
(நெருப்)பூ குளிக்க செய்து விட்டாயே!

தாலாட்டுகளி ன்ரீங்காரம் ஓயுமுன்
ஒப்பாரிகளின் ஓங்காரம்!

கள்ளிச் செடிகளை விட்டுவிட்டு
மலர்களை மாய்த்தது ஏனோ?
குள்ள நரிகளை விட்டுவிட்டு
இளங்கன்றுகளை வேட்டையாடியது ஏனோ?

பன்னீர் புக்ஷ்பங்களுக்கு எங்கள்
கண்ணீர் புக்ஷ்பங்களை காணிக்கையாக்குகிறோம்!

குறிப்பு: கும்பகோணம் தீ விபத்தின் போது எழுதப்பட்டது.

அடைக்கலம் தேடி!

அன்று

புத்தர் சிரித்தார்
மகிழ்ச்சியில் கருவறை உடைத்தேன்!

இன்று

நிலமகளும் சிரித்தாள்
உறவுகள் கல்லறையில்
திசைகளும் புரியவில்லை
அடைக்கலம் தேடி
உந்தன் கைகளில் நான்.

குறிப்பு: குஜராத் பூகம்பத்தின் போது படைக்கப் பட்டது.
புத்தர் சிரித்தார் என்பது இந்தியாவின் அணுகுண்டு சாதனையைக் குறிக்கும்

இராமன்கள்

காதலித்தவனை விட்டு மற்றொருவள்
காதலனை மணம் கொண்டால்
மற்றொரு சீதை தீக்குளிப்பாள் என்று
க‌ற்பு காக்க கனல் புகும் சீதைகளும்
கொண்டவன் காலுதைகளை
வரமென நினைக்கும்
அகலிகைகளும் உள்ளவரை இங்கே
இராமன்களுக்குப் பஞ்சமில்லை!!

க‌லியுக‌ காதல்

காதல் மொழி பேசி
பறந்து சென்றவள்
வந்தாள் கணவனுடன்..

காத்திருப்பவன்
கட்டியவளின் முந்தாணையில்
இவர்களைகாதலர்கள் என்பதா?
இல்லை க‌லியுக‌ விப‌ச்சாரிக‌ள் என்ப‌தா?

புத்தாண்டு

நேற்று வரை செய்யாததை
நாளை முதல் செய்ய நினைக்கும் மனது..

இன்று வரை கனவு கண்டதை
நாளை முதல் நனவவாக்கிட துடிக்கும் மனது..

நேற்றுக‌ளை ம‌ற‌ந்து விட்டேன்
நாளை முத‌ல் நான் புதிய‌வ‌ன்..

அத்தனையும் முடியுமா?

இது கடந்த முறை போல் இல்லை
இந்த முறை நிச்சயம்..

ச‌ந்தேக‌ம் துடைத்து ச‌த்த‌மில்லாம‌ல்
புத்தாண்டை கொண்டாட காத்திருக்கும் ம‌ன‌து..

க‌ட‌ந்த‌ முறை க‌ட‌ந்து சென்ற‌வை
கை வந்திடவும்
கனவுகளும் நம்பிக்கைகளும்
நம் வாழ்வில் ஒளி சேர்க்க 
இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!!!!!