Wednesday, January 17, 2007

கேள்வி

நெடுஞ்சாலைப் பயணம் நெடிதாய் அமையவே
இயற்கையன்னையின்  தரிசனத்துக்காக‌
இமைகள் மூட மறுத்தேன்!
வியக்க வைக்கும் காட்சிக்கு மத்தியில் - என்னை
திகைக்க வைத்தது அந்த ஒரு கணக் காட்சி..
தெரு ஓர குப்பைத் தொட்டியில் விழுந்த எச்சிலை எச்சில் படுத்தும் ஆசையில்
தளிர் இலை துழாவிய  தளிர் கரங்களுக்கு
வெளிர் முகம் காட்டி வறுமையின் சிரிப்பு!
ஏமாற்றம் காணும் தளிர்முகம் காண நினைக்கையில்
எனை  ஏமாற்றம் காணச் செய்து விட்டாள்
வறுமைக்கும் உறவுப் புன்னகை காட்டி
அடுத்த இலையை எதிர் நோக்கி
ஆவலுடன் காத்திருக்கும்  விநோதத்தால்!
காட்சி மறைந்தது கேள்விகள் பிறந்தது..
பிறப்பு  கொடுத்த உறவை இறப்பு முத்தமிட்டதால்
வறுமை உறவானதோ? - இல்லை
திசை மாறிய உறவுகள் பிறப்பளித்ததால்
வறுமை உறவானதோ? - இல்லை
பெண்முகம் கண்டு பொன்முகம் காணா உறவுகள் கைவிட்டதால்
வறுமை உறவுக்கை நீட்டியதோ?
பதில் தேடி எனகுள் ஒரு தேடல்.